Friday, April 23, 2010

தினசரி செயலில் காட்டிவிடு.

காலையில் ஐந்துக்கு எழுந்துவிடு
மாலையில் பத்துக்கு படுத்துவிடு
மலத்தை தவறாது கழித்துவிடு
பல்லை தவிர்க்காது துலக்கிவிடு
தினமும் காலையில் குளித்துவிடு
அலம்பிய துணியை அணிந்துவிடு

உற்சாகமாய் நீயும் வாழ்வதற்கு
உடற்பயிற்சி தினமும் செய்துவிடு
உணவினை நேரம் தவறாது
உண்டு தண்ணீரும் குடித்துவிடு
உண்ட உடனே படுத்துவிடாமல்
கொஞ்சத் தூரம் நடந்துவிடு

பெற்றோருக்கு மதிப்பு கொடுத்துவிடு
அவரிடம் ஆசிகள் பெற்றுவிடு
கண்முன் நிற்கும் தெய்வமவர்
கடவுளாய் அவரை வணங்கிவிடு
பற்றின்மேல் பற்று வைத்தும்மை
பக்தராய்ப் போற்றி காத்திடுவர்.

மனங்களில் இலக்கை நினைத்துக்கொண்டு
வணங்கிடு உந்தன் கடவுள்தனை
நினைத்தது கைகூட வேண்டுமென்று
நித்தமும் வணங்கி துதித்துவிடு
நல்லதே எண்ணங்கள் வளர்த்துவிடு
கெட்டதை அடியோடு அழித்துவிடு

மற்றவர்க்கு மதிப்பு கொடுத்துவிடு
உற்றவரை உயர்வாய் மதித்துவிடு
மனைவியை சமமாய் நடாத்திவிடு
வாழ்க்கையை சரியாய் புரிந்துவிடு
அவரவர்க்கு அவருரிமை கொடுத்துவிடு
அடுத்தவரைப் பார்த்துநீ திருந்திவிடு

அளவோடு பணச்செலவு செய்துவிடு
அயராது வேண்டியளவு உழைத்துவிடு
வீட்டிலே சிறுதோட்டம் செய்துவிடு
விளைந்ததைக் கொண்டுநீ சமைத்துக்கொடு
எப்படிச் செய்வதென்று சொல்லிக்கொடு - உன்
பிள்ளைகள் தொடர்ந்து செய்வதற்கு

அடக்கமாய் நீயும் நடந்துவிடு
ஆனந்தமாய் என்றும் இருந்துவிடு
துக்கத்தைக் கண்டு துவளாது
நல்லதற்கு என்றே நினைத்துவிடு
அதற்கான பிழையை அறிந்துவிடு
அடுத்தமுறை அதைநீ திருத்திவிடு

நல்லதாய் வார்த்தைகள் பேசிவிடு
மற்றையோர் மனங்குளிர நடந்துவிடு
கற்றவரக ளோடுநீ சேர்ந்துவிடு
மற்றதெல்லாம் படிக்காமல் வந்துவிடும்
பற்றவை உன்மனதில் இலட்சியத்தை - அது
கொற்றமாய் வீற்றிருக்கும் உன்வாழ்வில்.

Print this post

No comments: