Tuesday, September 3, 2013

இருந்தும் இல்லாதவர்கள்


எனக்கு அம்மா இல்ல... …..........
அப்பா இல்ல.....................
அண்ணா இல்ல.................
யாருமே இல்ல...............
நான் ஏன் உயிரோட இருக்கணும்..............
நான் சாகப் போறன்.......................”
என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள் பொற்கொடி.

பொற்கொடிக்கு 21 வயது தான் ஆகிறது. செந்தளிப்பான, அழகான வட்ட முகம். நேர்த்தியாக வாரியிழுத்துப் பின்னப்பட்ட தலைமுடி, முத்துப் போன்ற பல்வரிகள் என அனைத்து அழகையும், அவளுக்குக் கொடுத்த இறைவன், அவளது வயது, உயரத்திற்கு ஏற்றவாறு இல்லாமல் சற்று உருவத்தில் பெரிய உடலை அவளுக்கு கொடுத்திருந்தான்.

பொற்கொடி வீட்டில் ஒரே பொண்ணு. கடைசிப்பிள்ளையும் கூட. முத்த இருவரும் அண்ணன்கள். அவர்கள் இருவரும் தத்தமது வேலைகளைச் செய்து கொண்டு, தமக்கும் அந்தக் குடும்பத்துக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என்றவாறு ஏனோ தானோ என்று இருந்தார்கள்.

இவளுக்கு 14 வயது இருக்கும் போது, தாயாருக்கும் தந்தையாருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. சிறிய பிரச்சனை பெரிய பிரச்சனையாகி நீதிமன்றம் வரை சென்றது. பிறகென்ன? விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்கள். நீதிமன்றம் இவர்கள் மீண்டும் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளனவா என்பதைப் பரிசீலிப்பதற்காக, ஒரு வருட கால அவகாசம் வழங்கி தீர்ப்பைத் தள்ளிப் போட்டது.

இந்த ஒருவருடத்தில் அவர்களது வீடே இரண்டாகப் பிரிந்து விட்டது. சமையல், படுக்கைய‌‌றை இரண்டானது... வீட்டு வாசல் இரண்டானது என அனைத்துமே இரண்டானது. யாரும் யாரையும் பார்த்துக் கொள்வதில்லை. பார்க்கும் சந்தர்ப்பங்களிலும் முகத்தினைத் திருப்பிக் கொண்டார்கள்.