Sunday, June 8, 2014

பிஞ்சு நெஞ்சுக் காதல் - 3.


வீடு வந்ததும் சைக்கிலை ஸ்ராண்டில் விட்டு விட்டு, அவனை உள்ளுக்கு வருமாறு சொல்லி விட்டு, 'கார்த்திக் வீட்டுக்கு வந்திருக்கிறான்' என்ற சந்தோசத்தில் துள்ளிக்கொண்டு


" அம்மா....
அம்மா.... யார் வந்திருக்கிறதெண்டு ஒருக்கா வந்து பாருங்கோவன்...."
 
என்று வீட்டுக்குள் ஓடினாள்.


" என்னடி யார் தான் வந்திருக்கிறது....."

என்று குசுனியில் இருந்து வெளியில் வந்தார் வசந்தா ரீச்சர்.


" .... ராகவனா......
வாடா.....
நல்லா இருக்கிறியாடா.... ?
நல்லா வளர்ந்து, மீசையும் அரும்புது..... !
இனி ரோட்டால போற பெட்டையள், உன்னைத் தாண்டிப் போறது கஸ்ரம் தான் ....."

என்று தமாசாகப் பேசிக்கொண்டு வந்தார்.


ரீச்சர் வரவும் கதிரையில் இருந்து எழுந்து நின்ற கார்த்திக்

" வணக்கம் ரீச்சர் ...
நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்...."

என்று பௌவியமாகக் கேட்டான்.


" நாங்கள் நல்லா இருக்கிறோம்.....
இது பள்ளிக்கூடம் இல்லை.... எங்கட வீடு ....
இரு......”

என்று அவனை கதிரையில் இருக்கச்சொல்லிவிட்டு, தானும் அவன் பக்கத்தில் அமர்ந்தார் ரீச்சர்.


" உன்னைப்பற்றிக் கதைக்காத நாளே இல்லை...
தாரணி தான் உன்னை மறக்கேல்லை....
தான் கணிதத்திலயும் மற்ற பாடங்களிலையும் நல்ல மாக்ஸ் எடுக்கக்க காரணம் நீ தான் எண்டு வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்பாள்.
நீ என்னட்டையும் படிச்சனி எண்டு சொல்லப் பெருமையாகத் தான் கிடக்கு...."

என்று சொன்ன ரீச்சர்

" தாரணி.... இஞ்சை வந்து ராகவனோட கதைச்சுக் கொண்டிரு...
நான் தேத்தண்ணி பொட்டுக் கொண்டு வாறன்...."

என்று எழுந்தார்.


" நீங்கள் கதைச்சுக் கொண்டிருங்கோ....
நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன் ..."

என்று ஆர்வம் பொங்கச் சொல்லி , தேநீர் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டாள் தாரணி.


" என்னடா இது புதுமையாகக் கிடக்கு...
அப்படியெண்டா கார்த்திக்கை நெடுகலும் வரச்சொன்னா, நீயும் தேத்தண்ணி போட்டுப் பழகி விடுவாய்... "

என்று நக்கலாகச் சொல்லி கொக்கட்டம் போட்டுச் சிரிக்கவும், கார்த்திக்கும் சிரிக்க குசுனிக்குள் இருந்து தாரணியும் சிரிச்சுக்கொண்டே,


" அப்போ அவரை வரச்சொல்லுங்கோ...
நான் தேத்தண்ணி மட்டுமில்ல சமையலையும் பழகி விடுகிறேன்."

என்று தனது மனதிலுள்ள ஆதங்கத்தை சூசகமாகச் சொன்னாள்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக்கு தலையே சுற்றியது.

தாயும் மகளும் எவ்வளவு இயல்பாகத் தன்னை வைத்து நக்கலடிக்கிறார்கள் என்றும், முதலே பேசி வைத்தது போன்று கதைப்பதையும் நினைத்து வியப்படைந்தான்.


பிறகு ரீச்சர்

" உனது படிப்புகளெல்லாம் எப்படியப்பா போகுது கார்த்தி....?. "

என்று கேட்டார்.

 
" நான் படிப்பை விட்டுட்டு வேலை செய்யறன் ரீச்சர்...
அதெல்லாம் ஒரு பெரிய கதை....
அதை விடுங்க ரீச்சர்....."

என்றான் கார்த்திக் சலிப்புடன்.


அந்த நேரத்தில் தேத்தண்ணியுடன் வந்த தாரணி,


" சரியா... பாரதக் கதை சொல்லத் தொடங்கியாச்சோ....
என்ன தான் ரெண்டு பேரும் கதைப்பியளோ தெரியாது....
திரும்பியும் அவரை அழ வைக்கப் போறியளோ.....?
அதை விடுங்கோம்மா....."

என்று சொல்லி கதையை நிறுத்திவிட்டு, இருவருக்கும் தேநீரைக் கொடுத்தாள்.

" சரி கார்த்தி, இன்னும் கொஞ்ச நேரத்தில் சமையல் முடிஞ்சிடும். இருந்து சாப்பிட்டுட்டுப் போ...
உனக்குப் பிடிச்ச கீரையும், பைத்தங்காயும் தான் கறி...."

என்று சொல்லி விட்டு குசுனிப்பக்கம் போனார் ரீச்சர்.


இதைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக், தாரணி தன் திறமையால் தாயாரின் கதையை நிறுத்தியதையும், தாயும் அதைக் கேட்டு பணிவாக இருக்கிறதையும் நினைத்து அவ்வீட்டில் தாரணிக்கு இருந்த செல்வாக்கை எண்ணி வியந்து எப்படியும் தாரணி தன் கலியாணத்துக்கு சம்மதம் பெற்று விடுவாள் என்று தன்னுள் புழகாங்கிதமடைந்தான்.

Sunday, June 1, 2014

பிஞ்சு நெஞ்சுக் காதல் - 2.



மறுநாள் எழுந்து குளித்து வெளிக்கிட்டு தாரணியை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தவாறு 9 மணியளவில் பள்ளிக்கூடத்திற்கு வந்து சேர்ந்தான்.


அதற்கு முன்னரே தாரணி அங்கு வந்து காத்திருந்தாள்.

கார்த்திக்கைக் கண்டதும் எழுந்திருந்தாள்.


அவன் தனது பழைய வகுப்பினுள் வந்து, முன்னர் இருந்த இடத்தில் இருந்த போது, அவனருகில் வந்த தாரணி, அவனது கை மேல் தன் கை வைத்து கண் கலங்கினாள். அவள் கண் கலங்கியதும், கார்த்திக்கும் கண் கலங்கி விட்டது.


கண்களைத் துடைத்தவாறே தாரணி துவக்கினாள்,


" கார்த்தி,

எமது பழைய அன்பையும், நினைவுகளையும் நினைத்து,

அதிலிருந்து ஒரு முடிவுக்கு வருவதற்காகத் தான்,

உங்களை பள்ளிக்கூடத்துக்கு வரச்சொன்னேன்.

நான் விட்டுக்கு வந்த போது,

குடும்பச்சுமை, பொறுப்பு என்று பெரிய கதை எல்லாம் கதைச்சீங்கள்.

ஆனாலும், நீங்கள் என்னைக் கடைக்கண்ணால் அடிக்கடி பாத்ததை கவனிச்சன். அதிலிருந்து,

உங்களுக்கும் என்மேல இருந்த காதல் குறையேல்லஎண்டு தெரிஞ்சு கொண்டேன்.

அதை விட, அங்க உங்கட அப்பாவுக்கு முன்னால கதைக்கச் சங்கடப் பட்டதையும் பார்த்தன்.

அது தான் இஞ்சை வரச்சொன்னேன்.....

இந்த இடம் உங்களுக்கு என்னத்தை ஞாபகப்படுத்துகிறது...

சொல்லுங்கோ பாப்பம்.......?

எனக்கு நினைவுக்கு வருவதெல்லாம்,

நீங்க இந்தஇடத்தில, என்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்ததும்

அதற்குப் பதிலாக நான் உங்களுக்குக் குடுத்ததும் தான் ஞாபகம் வருகுது...."


என்று வாய் ஓயாது தனது நினைவுகளை சொல்லிக்கொண்டே போனாள்.


கார்த்திக் எதுவும் பேசவில்லை, கேட்டுக்கொண்டே இருந்தான். அதனால் தாரணியே தொடர்ந்து பேசினாள்.


" நான் வரும் போது உங்களுக்குக் காட்ட வேணுமெண்டு என்ரை றிப்போட் எடுத்துக் கொண்டு வந்தனான்.

இதைப் பாருங்கோ...

நான் இப்ப கணிதத்தில் 99 மாகஸ் எடுத்திருக்கிறேன்.

அதுக்கு நீங்கள் தானே காரணம்.

அந்த மாமரத்துக்குக் கீழ் இருந்து,

நீங்க எனக்குச் சொன்ன ஆறுதல் வார்த்தைகளும் அதன் பின்னர் நீங்கள் என்மீது எடுத்துக்கொண்ட அக்கறையும் தானே காரணம்.

எனது ஏக்கங்களையும், வலிகளையும் சுமந்து தள்ளாடிய போது,

அவற்றைக் குறைக்கும் சுமைதாங்கியாக, நீங்கள் இருந்தது தான், என்னை இந்த நிலைக்கு உயர்த்தி விட்டிருக்கிறது.

அதன் பின்னர் கிடைத்த பெருமையும், புகழ்ச்சியும் என்னை மேலும் உயர வைத்தது. அதை விட,

அதன் பின்னர், எனது குடும்பத்திடம் இருந்து கிடைத்த பரிவு தான் பிரதான காரணமாக இருந்தது.

இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது நீங்கள் தானே. ....."


என்று பெருமூச்சு விட்டாள் தாரணி.


இப்போ கார்த்திக் கதைக்கத் தொடங்கினான்.


" தாரணி .... !

இவற்றையெல்லாம் நீ சொல்லும் போது எனக்கு ஆறுதலாகவும் சந்தோசமாகவும் தான் இருக்கிறது.