Wednesday, July 2, 2008

வேசம் போடும் உறவுகள்....!!!



பாசம் போல நடித்து
வேசம் போடும் உறவுகள்
காயம் ஆன பின்னர் தான்
மாயம் ஆவர் அதிலிருந்து..!

வாசம் பிடித்து வந்து
நாசம் ஆக்குவர் நண்பரை,
தோஷம் பிடித்தது போல
சுற்றுவர் எமையெல்லாம்....!

நியாயம் பேசிப் பேசி
அநியாயம் செய்வர் கூடி,
தாடி வைத்து தம்மை
விடிவெள்ளி தாம்தான் என்பர்...!

பற்றி எரியுது பட்டினியில் வயிறு
பெற்றவன் மனசும் கல்லாய் ஆகுது,
தொற்றி இருப்பவன் தொண்டை வரை போட்டு
தொந்தி பெருத்து வதந்தி பரப்புறான்..!

சாபம் என்பது சும்மா இல்லை.
சோகம் அத்தனையையும் - நீ பெறப்போகும்,
பாவம் என்பதை அறியாதவனா சொல்..?
காலன் வந்து உன்னை கட்டையில் ஏற்ற...!

திட்டித் திட்டி தீயிலடித்து செய்கிறோம் சத்தியம்,
கட்டிய வேட்டியுமின்றி தூள் தூளாவாய் நிச்சயம்,
பட்டி தொட்டி எங்கும் பதுங்கியுள்ள படைகள்
வட்டி போட்டு கொடுப்பர் முதலுடன் சேர்த்து...!

கதறி அழும் சின்னஞ் சிறார்களை நினைத்துப் பாரும்,
நிச்சயமாய் அத்தனையும் நீர் செய்த கொடுமைகள்,
அவர்களின் கண்ணீரில் திரண்டு வந்த சுனாமி,
சுழற்றியடித்து சுக்கு நூறாக்கியிருக்கிறது பாரும்...!

கதை கதையாய் உலகெல்லாம் அளந்து,
பதை பதைக்க வைத்த, பதர்கள் நீங்கள்..,
விதையாய் விதைக்கப்பட்ட வித்துக்கள் - எம்மால்
சதை சதையாய்ப் போனீர் நீர் - ஒரு நொடியில்.....!!!

Print this post

No comments: