Wednesday, July 16, 2008

மறக்க முடியவில்லை இன்னும்....!!!

தட்டித் தட்டி, தடுக்குப் பாயில் இருந்து,
சிட்டுச் சிட்டாய், நடக்கப் பழகி,
பட்டுப் பட்டாய் அம்மா சொல்லி,
சொட்டுச் சொட்டாய் வளர்ந்து வந்ததை
மறக்க முடியவில்லை இன்னும்...!

நேசறி போய் நேசம் பிடித்து,
'அ' 'ஆ' படித்து, முத்துமாரி ரீச்சரிடம்,
அன்புப் பரிசு வாங்கி - அவர்
உச்சி மோந்து, கொஞ்சி வாழ்த்தியதை,
மறக்க முடியவில்லை இன்னும்....!

ஆரம்ப பாடசாலையிலே,
அதிக மார்க் வாங்கியதால்,
பரிசளிப்பு விழாவில்,
பரிசு வாங்கி பாராட்டுப் பெற்றதை,
மறக்க முடியவில்லை இன்னும்.....!

எல்லாப் பாடத்திலும், நல்ல மார்க் எடுத்து,
சங்கீதத்தில், குறைந்த மார்க் எடுத்து,
யோகராணி ரீச்சரிடம் - மூங்கில்
பிரம்பால், வாங்கிக் கட்டிக் கொண்டதை
மறக்க முடியவில்லை இன்னும்.....!

விஞ்ஞானத்தில், இனப்பெருக்கத்தொகுதி பாடத்தை
படிப்பிக்க வெட்கப்பட்ட, சுபத்திரா ரீச்சரையும்,
தடியெடுத்து வந்து படிப்பித்த, ராதா ரீச்சரையும்,
படி, படி என்று ஆர்வமூட்டும், சபாபதி ரீச்சரையும்
மறக்க முடியவில்லை இன்னும்.....!

கல்லூரி சென்று, கணித பாடம் படித்து,
யோகானந்தா வாத்தியாரின்
விவேகமான விளக்கங்களால்,
படிப்பிலே மேலெழுந்து வந்ததை,
மறக்க முடியவில்லை இன்னும்....!

என் வகுப்பு தோழர்களே - என்னை,
என் பெயர் தவிர்த்து, சின்னவன் என்றழைத்து,
இன்ரவலில் எப்போதும், எனக்காக ஓசியில்
ரீயும், வடையும், வாங்கித்தந்து சாப்பிட்டதை
மறக்க முடியவில்லை இன்னும்....!

படை நடவடிக்கையால் - எம் படிப்பை
இடைநிறுத்தி, ஊரெல்லாம் இழந்து
நடையாக நடந்து, தண்ணீர் குடிப்பதற்காக
கடைக்கோடி வரை, தேடி அலைந்ததை.
மறக்க முடியவில்லை இன்னும்....!

இன்னும் எத்தனை, எத்தனையோ
சுகமான சுமைகளை, தாங்கி நிற்கும்,
என் ஆழ்மனச் சுகங்களை,
தினம் தினம் நினைத்து மகிழ்கிறேன்...!
எதையும் மறக்கவில்லை இன்னும்....!!!

Print this post

No comments: