Saturday, June 28, 2008

பகைத்திடு வேண்டாச் செலவுகளை.....!!!

கஞ்சி குடித்தாலும்
வஞ்சி உன் மடியில்
தஞ்சமடைந்து படுத்திருந்தால்
பஞ்சமாகி விடும் கவலைகள்...!

கவலை என்பது மாரியில் கத்தும்
தவளை போல, மாதக் கடைசியில்
மடலைப் பார்க்கையில் வருத்தும்
விடலைக் குடும்பங்களுக்கு...!

படலை வரை வந்து தந்திடும் பொருட்கள்
தடையையும் மீறிய விலையாக இருக்கும்.
காலையில் எழுந்து சந்தை வரை போய் வந்தால்
கடைசியில் குறையும் எந்தையின் செலவு...!

வீண் பேச்சுப் பேசாது, அளந்து பேசிட்டால்,
வானளவு செலவு குறைத்து காலடியில் போட்டிடலாம்.
தேவையற்ற நேரங்களில் மின்னை தவிர்த்திட்டால்,
சேமிப்புக் கணக்கினிலே மீதியினை சேர்த்திடலாம்...!

பொதுப் போக்குவரத்தினை, தினமும் நீ பாவித்தால்
பாதிப் பணம் மீதியாகி, விஞ்சிவிடும் உன் சேமிப்பு.
சாதி மதம் பாராது அன்புடனே பழகிட்டால்
வீதியெல்லாம் சந்தோசத்தில், திளைத்துப் போய் வரலாம்...!

முயற்சி எடுத்து நீ - காலயில் சின்ன
பயிற்சி செய்திட்டால், ஒழிந்திடும் உன்
அழற்சி மற்றும் அனைத்துக் கொடிய நோய்களும்
பெயற்சி ஆகிவிடும் உனது மருத்துவச் செலவுகள்...!

கடையிலே சாப்பிட்டு உன்
உடை பெருத்துக் கொள்வதால்
வருகிறது இரட்டைச் செலவு.
தருகிறது வேதனையும் சோதனையும்....!

தவிர்த்திடு கடையினில் சாப்பாட்டினை,
சமைத்திடு வீட்டினில் சுவையோடு,
வளர்த்திடு உனது சேமிப்பினை,
பகைத்திடு வேண்டாச் செலவுகளை.....!!!

Print this post

No comments: