Sunday, May 18, 2014

துணை தேடும் இணைகள்

 


" உது மாதிரியான விடயங்கள் தான் எனக்கு எரிச்சலையும் கோபத்தையும் கிளறுது....

நானே கஸ்ரப்பட்டுத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறன்........

பிறகு வேலையாக இருக்கிறியோ.. சாப்பிட்டியோ என்று கேட்டுக் கொண்டு...

ச்ச்செ......"

என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தாள் சூரியா, தன் கணவர் சந்திரனிடம்.

 

சந்திரன் அகதியாக தஞ்சம் கோரி அவுஸ்ரேலியத் தடுப்பு முகாமில் 3 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றான். அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் உறவினர்களைத் தொடர்பு கொண்டு கதைப்பதற்காக அவனுக்கு வாரத்துக்கு 3 தொலைபேசி அட்டைகள் வழங்கப்படுகின்றது.

 

அதன் பிரகாரம் அவனது பெற்றோர், மனைவியின் பெற்றோருக்கு வாரமொரு முறையும் சூரியாவுக்கு தினமும் அவளது நேரம் பிற்பகல் 7 மணிக்குத் தொடர்பு கொள்ளுவான். அப்போது அவனது நேரம் 10 மணியாகி விடும் என்பதால் அவனது அறையில் வசிப்பவர்கள் எல்லாம் தூங்கிவிடுவார்கள்.

 

அவர்களது நித்திரை கலைந்து விடக்கூடாது என்பதற்பாக சற்று மெதுவாகவே தொலைபேசியில் பேசுவான் சந்திரன். அதேவேளை அவனுக்கு வழங்கப்படும் தொலைபேசி அட்டையும் மிகத்துல்லியமற்ற சம்பாசனைகளையே அனுப்பும். அப்போது கேட்பவரகளுக்கும் கொஞ்சம் கஸ்ரமாகத் தான் இருக்கும்.


சூரியாவுக்கு அந்நேரத்தில் வழமையாக தொடர்பு கொள்ளும் போது அவள் ஏதோ ஒரு வேலையுடன் தான் இருப்பாள். எல்லோரும் ஏதோவொரு வேலையுடன் தான் இருப்பார்கள். ஆனால் தொலைபேசி மணியடித்தால் பேச முடியாத அளவுக்கு வேலையாக இருக்கமாட்டார்கள்.


சூரியா அப்போது தான் சமைத்துக் கொண்டிருப்பாள் அல்லது குளித்துக் கொண்டிருப்பாள் அல்லது கணணியில் ஏதாவொரு வேலையாக இருப்பாள். அதன் படி சந்திரன் அவளைத் தொடர்பு கொள்ளும் போது அவளது வேலைகளை தொந்தரவு பண்ணி விடக் கூடாது என்பதற்காக அவளிடம் வேலையாக இருக்கின்றீர்களா என்ற கேள்வியுடனேயே சம்பாசனைகளை ஆரம்பிப்பான். அவளுக்கு இருக்கும் நேரம் மனநிலையைப் பொறுத்து ஒரு நிமிடம் முதல் ஒரு மணித்தியாலம் அதற்கு மேலும் கதைத்துக் கொண்டிருப்பார்கள். என்ன கதைப்பார்களோ தெரியாது மணித்தியாலம் பறந்து விடும்.



உறவுகளைப் பிரிந்து, கடல் கடந்து ஆயிரக்கணக்கான கிலோமீற்றர் தூரத்தில் வந்து அகதித் தஞ்சம் கோரியிருந்தவனுக்கு அவனது மனைவி உறவினர்களிடமிருந்தே மன ஆறுதலுக்கான தஞ்சம் கிடைத்துக் கொண்டிருந்தது. அவ்வாறு ஆசையோடு, குறித்த நேரம் வரை காத்திருந்து உடலில் பசி எடுக்கும் போது எவ்வாறு மூளைக்கு தகவல் கிடைக்கின்றதோ அதே போன்று அவாவுடன் காத்திருந்து அந்நேரம் வந்ததும், மற்றவர்கள் அந்நேரத்தில் தொலைபேசியை யாரும் பிடித்து விடக்கூடாது என்பதற்காக, அவசரமாய், ஆசையோடு சென்று சூரியாவின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டால், குரல்வழிச் செய்தி போய் கொண்டிருக்கும் . சோர்வுடன் மீண்டும் முயற்சி பண்ணுவான். அப்போதும் அந்தப் பொண்ணு தான் " உங்கள் செய்தியை சொல்வதற்கு இலக்கம் ஒன்றை அழுத்துங்கள்" என்று தொடருவாள். ஏமாற்றத்துடன் சில நிமிடங்கள் கழித்து முயற்சி பண்ணுவான். அப்போது "ஹலோ" என்ன வார்த்தையுடன் சம்பாசனைகள் ஆரம்பிக்கும்.


சூரியாவும், இருதடவைகள் தொடர்பினை எடுக்க முடியாமைக்கு, தொடர்ச்சியாக வேலையாக இருப்பதாகச் சொல்லமுடியாததால், முதல் மொபைல் றிங் பண்ணும் போது நான் மேல் மாடியில் இருந்தேன் அல்லது கிச்சினில் இருந்தேன் என்று சொல்லி சமாளிப்பாள். ஏனென்றால் இவ்வாறு பல தடவைகள் தொடர்பு எடுக்காமையினால் பெரிய பிரச்சனைகளே வந்திருக்கின்றது. சந்திரனுக்கும் அவளது பிசியான வேலை தெரிந்திருந்ததால் அவற்றை கண்டு கொள்ளாது, தவிர்த்து விடுவான். ஆனாலும், வேலையாக இருக்கின்றீர்களா எனக் கேட்டு, அவள் இல்லை என்று சொன்னால் மட்டுமே அவன் தனது சம்பாசனையை நீட்டிக் கொண்டு போவான். அது அவளுக்கும் நன்றாகவே தெரியும்.


அவ்வாறே அன்றும் 2 குரல்வழிச்செய்தியின் பின்னர் கிடைத்த தொடர்பில் "வேலையாக இருக்கின்றீர்களா..? சாப்பிட்டீர்களா....?" என்று சம்பாசனையைத் தொடர்ந்தான் சந்திரன்.



சூரியா வேலையாக இல்லை என்று சொன்னதனூடாக, அன்றைய சம்பாசனை சற்று நீண்டு சென்றது. சில நிமிடங்களின் பின்னர், சந்திரன் எதுவும் சொல்லாமலேயே ம்... ம்... என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அதனால் அவள் ஏதோ வேலையாக இருக்கின்றாள் என்று நினைத்து " நீங்கள் வேலையாக இருக்கின்றீர்கள் போல கிடக்கு... நான் பிறகு உங்களுக்க கோல் எடுக்கின்றேன்." என்று சொன்னதும் தான் அந்தக் கத்துக் கத்தினாள் சூரியா.



அதன் மேல் அவனால் சம்பாசணையைத் தொடர முடியவில்லை. அவனது மன அழுத்தங்களிலிருந்தும் விடுபட முடியவில்லை. பை குட்நைட் என்று சொன்ன போது எதுவித பதிலுமின்றி தொடர்பு துண்டிக்கப்பட்டு விட, தனது குடும்பத்துடன் கதைப்பதற்காக காத்திருந்த மற்றவருக்கு இடம் கொடுத்து விட்டு, கனத்த மனதோடு பனித்த கண்ணீர்த் துளிகளோடு


"எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி தேடிப்பார்த்தேன்...

அது எங்கேயும் இல்லே....." என்ற பாடலை முணுமுணுத்தவாறு தனது தாடியைத் தடவியவடி படுக்கையில் வந்து விழுந்தான் சந்திரன்.


Print this post

No comments: