" கண்ணய்யா... நீங்கள் நாளைக்கு அதிகாலை 4 மணிக்கு வேலைக்கு வரவேண்டி இருக்கும். ஏனென்றால் 3000 இடியப்பம் ஓடர் வந்திருக்கிறது. காலை 7.30க்கு அவர்களுக்கு கொடுக்க வேண்டும். "
என்று கண்ணய்யாவுக்கு மறுநாளுக்கான வேலையை சொல்லிக் கொண்டிருந்தாள் கஸ்தூரி.
அது ஒரு பெரிய உணவு உற்பத்திக் கம்பனி. அதில் உடனடி இடியப்பம் தான் அவர்கள் உற்பத்தி செய்யும் உணவுகளில் ஸ்பெஷல். பல உணவகங்கள், திருமண வைபவங்கள், கோவில்கள், மற்றும் என்ன நிகழ்வுகள் எல்லாம் மதிய உணவு நேரம் தவிர்ந்த காலை , மாலை உணவு நேரங்களில் நடக்கின்றனவோ அவையெல்லாம் இவர்களிடம் தான் ஓடர் கொடுக்க வருவார்கள்.
ஒரு மணி நேரத்தில் 1000 இடியப்பங்களைப் பிழிந்து அவித்து விடக் கூடிய மெசினறியைக் கொண்டிருந்தது அந்தக் கம்பனி. இடியப்பத்தைக் கொடுக்கும் போது அதற்குரிய சாம்பார், சட்னியையும் கொடுக்கும் பொறுப்பும் இந்தக் கம்பனியுடையதே.
அதனால் தான் கஸ்தூரி அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு, மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.