" காலைத்தென்றல் பாடிவரும் கானம் ஒரு கானம்...." என்று கைத்தொலைபேசியின் இரண்டு மூன்று தடவை பாடி ஓய்ந்த பின்னர் கண்ணை விழித்துப் போனைப் பார்த்த அரசு 5 மிஸ்ட் கோல் இருக்கவும் நேரத்தைப் பார்த்தான். மணி 11 ஐத் தாண்டிக் கொண்டிருந்தது.
அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சற்று நீண்ட நேரம் தூங்குவதற்காக அலார மணியை நிறுத்தி விட்டிருந்தான்
. மற்றைய நாட்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தங்களது பலசரக்குக் கடையில் வேலை செய்வதற்காக 6 மணிக்கே எழுந்து வேலை செய்ய வேண்டியிருந்தது.
அரசு கடையில் வேலை என்றால் அவனது அம்மா சுதாவுக்கு வீட்டிலும் கடையிலும் என இருபடி வேலை அவளுக்கு
. பிள்ளைக்கு 3 வேலை சாப்பாடு தயாரித்து கடைக்குக் கொண்டுபோய்க் கொடுப்பதிலிருந்த வீட்டில் வேலை முடித்து கடையில் வேலை செய்வதிலிருந்து அவளது தலையிலும் ஆயிரம் வேலைகளை தன் தலையில் இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தாள்.
அன்று அரசுக்கு விடுமுறை என்றால் தாய் சுதாவுக்கும் விடுமுறை தான்
அவளும் சற்று நீண்ட நேரம் தூங்கித் தான் விட்டாள்.
அதனால் தாயும் மகனும் தூக்கம் விட்டு எழுந்து குளித்து வர
12 மணிக்கு மேலாகி விட்டது. ஒரு சோறும் கறியும் சமைக்க எப்படியும் 2 மணிநேரமாவது எடுக்கும் அதுவரை அரசு பசி தாங்க மாட்டான் என்று நினைத்த தாய், உடனடிச் சாப்பாடு என்ன உள்ளது என்று பார்த்த போது முதல் நாள் இரவு மீதியிருந்த சோற்றை படுதாகாமல் இருப்பதற்கு தண்ணீர் ஊற்றி வைத்தது நினைவுக்கு வந்தது.




