Showing posts with label நெடுங்கதை. Show all posts
Showing posts with label நெடுங்கதை. Show all posts

Sunday, June 8, 2014

பிஞ்சு நெஞ்சுக் காதல் - 3.


வீடு வந்ததும் சைக்கிலை ஸ்ராண்டில் விட்டு விட்டு, அவனை உள்ளுக்கு வருமாறு சொல்லி விட்டு, 'கார்த்திக் வீட்டுக்கு வந்திருக்கிறான்' என்ற சந்தோசத்தில் துள்ளிக்கொண்டு


" அம்மா....
அம்மா.... யார் வந்திருக்கிறதெண்டு ஒருக்கா வந்து பாருங்கோவன்...."
 
என்று வீட்டுக்குள் ஓடினாள்.


" என்னடி யார் தான் வந்திருக்கிறது....."

என்று குசுனியில் இருந்து வெளியில் வந்தார் வசந்தா ரீச்சர்.


" .... ராகவனா......
வாடா.....
நல்லா இருக்கிறியாடா.... ?
நல்லா வளர்ந்து, மீசையும் அரும்புது..... !
இனி ரோட்டால போற பெட்டையள், உன்னைத் தாண்டிப் போறது கஸ்ரம் தான் ....."

என்று தமாசாகப் பேசிக்கொண்டு வந்தார்.


ரீச்சர் வரவும் கதிரையில் இருந்து எழுந்து நின்ற கார்த்திக்

" வணக்கம் ரீச்சர் ...
நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்...."

என்று பௌவியமாகக் கேட்டான்.


" நாங்கள் நல்லா இருக்கிறோம்.....
இது பள்ளிக்கூடம் இல்லை.... எங்கட வீடு ....
இரு......”

என்று அவனை கதிரையில் இருக்கச்சொல்லிவிட்டு, தானும் அவன் பக்கத்தில் அமர்ந்தார் ரீச்சர்.


" உன்னைப்பற்றிக் கதைக்காத நாளே இல்லை...
தாரணி தான் உன்னை மறக்கேல்லை....
தான் கணிதத்திலயும் மற்ற பாடங்களிலையும் நல்ல மாக்ஸ் எடுக்கக்க காரணம் நீ தான் எண்டு வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்பாள்.
நீ என்னட்டையும் படிச்சனி எண்டு சொல்லப் பெருமையாகத் தான் கிடக்கு...."

என்று சொன்ன ரீச்சர்

" தாரணி.... இஞ்சை வந்து ராகவனோட கதைச்சுக் கொண்டிரு...
நான் தேத்தண்ணி பொட்டுக் கொண்டு வாறன்...."

என்று எழுந்தார்.


" நீங்கள் கதைச்சுக் கொண்டிருங்கோ....
நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன் ..."

என்று ஆர்வம் பொங்கச் சொல்லி , தேநீர் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டாள் தாரணி.


" என்னடா இது புதுமையாகக் கிடக்கு...
அப்படியெண்டா கார்த்திக்கை நெடுகலும் வரச்சொன்னா, நீயும் தேத்தண்ணி போட்டுப் பழகி விடுவாய்... "

என்று நக்கலாகச் சொல்லி கொக்கட்டம் போட்டுச் சிரிக்கவும், கார்த்திக்கும் சிரிக்க குசுனிக்குள் இருந்து தாரணியும் சிரிச்சுக்கொண்டே,


" அப்போ அவரை வரச்சொல்லுங்கோ...
நான் தேத்தண்ணி மட்டுமில்ல சமையலையும் பழகி விடுகிறேன்."

என்று தனது மனதிலுள்ள ஆதங்கத்தை சூசகமாகச் சொன்னாள்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக்கு தலையே சுற்றியது.

தாயும் மகளும் எவ்வளவு இயல்பாகத் தன்னை வைத்து நக்கலடிக்கிறார்கள் என்றும், முதலே பேசி வைத்தது போன்று கதைப்பதையும் நினைத்து வியப்படைந்தான்.


பிறகு ரீச்சர்

" உனது படிப்புகளெல்லாம் எப்படியப்பா போகுது கார்த்தி....?. "

என்று கேட்டார்.

 
" நான் படிப்பை விட்டுட்டு வேலை செய்யறன் ரீச்சர்...
அதெல்லாம் ஒரு பெரிய கதை....
அதை விடுங்க ரீச்சர்....."

என்றான் கார்த்திக் சலிப்புடன்.


அந்த நேரத்தில் தேத்தண்ணியுடன் வந்த தாரணி,


" சரியா... பாரதக் கதை சொல்லத் தொடங்கியாச்சோ....
என்ன தான் ரெண்டு பேரும் கதைப்பியளோ தெரியாது....
திரும்பியும் அவரை அழ வைக்கப் போறியளோ.....?
அதை விடுங்கோம்மா....."

என்று சொல்லி கதையை நிறுத்திவிட்டு, இருவருக்கும் தேநீரைக் கொடுத்தாள்.

" சரி கார்த்தி, இன்னும் கொஞ்ச நேரத்தில் சமையல் முடிஞ்சிடும். இருந்து சாப்பிட்டுட்டுப் போ...
உனக்குப் பிடிச்ச கீரையும், பைத்தங்காயும் தான் கறி...."

என்று சொல்லி விட்டு குசுனிப்பக்கம் போனார் ரீச்சர்.


இதைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக், தாரணி தன் திறமையால் தாயாரின் கதையை நிறுத்தியதையும், தாயும் அதைக் கேட்டு பணிவாக இருக்கிறதையும் நினைத்து அவ்வீட்டில் தாரணிக்கு இருந்த செல்வாக்கை எண்ணி வியந்து எப்படியும் தாரணி தன் கலியாணத்துக்கு சம்மதம் பெற்று விடுவாள் என்று தன்னுள் புழகாங்கிதமடைந்தான்.

Sunday, June 1, 2014

பிஞ்சு நெஞ்சுக் காதல் - 2.



மறுநாள் எழுந்து குளித்து வெளிக்கிட்டு தாரணியை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தவாறு 9 மணியளவில் பள்ளிக்கூடத்திற்கு வந்து சேர்ந்தான்.


அதற்கு முன்னரே தாரணி அங்கு வந்து காத்திருந்தாள்.

கார்த்திக்கைக் கண்டதும் எழுந்திருந்தாள்.


அவன் தனது பழைய வகுப்பினுள் வந்து, முன்னர் இருந்த இடத்தில் இருந்த போது, அவனருகில் வந்த தாரணி, அவனது கை மேல் தன் கை வைத்து கண் கலங்கினாள். அவள் கண் கலங்கியதும், கார்த்திக்கும் கண் கலங்கி விட்டது.


கண்களைத் துடைத்தவாறே தாரணி துவக்கினாள்,


" கார்த்தி,

எமது பழைய அன்பையும், நினைவுகளையும் நினைத்து,

அதிலிருந்து ஒரு முடிவுக்கு வருவதற்காகத் தான்,

உங்களை பள்ளிக்கூடத்துக்கு வரச்சொன்னேன்.

நான் விட்டுக்கு வந்த போது,

குடும்பச்சுமை, பொறுப்பு என்று பெரிய கதை எல்லாம் கதைச்சீங்கள்.

ஆனாலும், நீங்கள் என்னைக் கடைக்கண்ணால் அடிக்கடி பாத்ததை கவனிச்சன். அதிலிருந்து,

உங்களுக்கும் என்மேல இருந்த காதல் குறையேல்லஎண்டு தெரிஞ்சு கொண்டேன்.

அதை விட, அங்க உங்கட அப்பாவுக்கு முன்னால கதைக்கச் சங்கடப் பட்டதையும் பார்த்தன்.

அது தான் இஞ்சை வரச்சொன்னேன்.....

இந்த இடம் உங்களுக்கு என்னத்தை ஞாபகப்படுத்துகிறது...

சொல்லுங்கோ பாப்பம்.......?

எனக்கு நினைவுக்கு வருவதெல்லாம்,

நீங்க இந்தஇடத்தில, என்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்ததும்

அதற்குப் பதிலாக நான் உங்களுக்குக் குடுத்ததும் தான் ஞாபகம் வருகுது...."


என்று வாய் ஓயாது தனது நினைவுகளை சொல்லிக்கொண்டே போனாள்.


கார்த்திக் எதுவும் பேசவில்லை, கேட்டுக்கொண்டே இருந்தான். அதனால் தாரணியே தொடர்ந்து பேசினாள்.


" நான் வரும் போது உங்களுக்குக் காட்ட வேணுமெண்டு என்ரை றிப்போட் எடுத்துக் கொண்டு வந்தனான்.

இதைப் பாருங்கோ...

நான் இப்ப கணிதத்தில் 99 மாகஸ் எடுத்திருக்கிறேன்.

அதுக்கு நீங்கள் தானே காரணம்.

அந்த மாமரத்துக்குக் கீழ் இருந்து,

நீங்க எனக்குச் சொன்ன ஆறுதல் வார்த்தைகளும் அதன் பின்னர் நீங்கள் என்மீது எடுத்துக்கொண்ட அக்கறையும் தானே காரணம்.

எனது ஏக்கங்களையும், வலிகளையும் சுமந்து தள்ளாடிய போது,

அவற்றைக் குறைக்கும் சுமைதாங்கியாக, நீங்கள் இருந்தது தான், என்னை இந்த நிலைக்கு உயர்த்தி விட்டிருக்கிறது.

அதன் பின்னர் கிடைத்த பெருமையும், புகழ்ச்சியும் என்னை மேலும் உயர வைத்தது. அதை விட,

அதன் பின்னர், எனது குடும்பத்திடம் இருந்து கிடைத்த பரிவு தான் பிரதான காரணமாக இருந்தது.

இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது நீங்கள் தானே. ....."


என்று பெருமூச்சு விட்டாள் தாரணி.


இப்போ கார்த்திக் கதைக்கத் தொடங்கினான்.


" தாரணி .... !

இவற்றையெல்லாம் நீ சொல்லும் போது எனக்கு ஆறுதலாகவும் சந்தோசமாகவும் தான் இருக்கிறது.

Thursday, May 29, 2014

பிஞ்சு நெஞ்சுக் காதல் - 1.



நான் கடைக்குப் போய்ச்சேரும் வரைக்கும் முதலாளி கடைக்கு வந்திடக் கூடாது.... அம்மாளாச்சி.... என்று அம்மாளை வேண்டிக்கொண்டு நேரத்தைப் பார்த்துப் பார்த்து சைக்கிளை ஊண்டி விளக்கினான் கார்த்திக்.


போகும் வழியில் தன்னுடைய வயதுப் பிள்ளைகளும் சைக்கிள் கரியலில் மூட்டைக் கணக்கில் புத்தகங்களை வைத்துக் கொண்டு போவதைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி நகரும் போது தான் அவனது பழைய நினைவுகள் எட்டிப்பார்க்கத் தொடங்கின.


அப்போது அவனுக்கு வயது 13 தான் ஆகியிருந்தது. ஆண்டு 7 படித்துக் கொண்டிருந்தான். படிப்பில் நல்ல கெட்டிக்காரன். என்னத்தை வகுப்பில் விளங்கப்படுத்தினாலும் கற்பூரம் மாதிரி ஒரே தடவையில் வேகமாகப் பற்றிக் கொள்ளுவான். இதனால் வகுப்பாசிரியர் வசந்தா ரீச்சருக்கும் தமிழ்-சமயச் ரீச்சர் மிஸ்.நாகேந்திரராசாவுக்கும் அவன் மீது நல்ல கெட்டிக்காரன் என்ற அபிப்பிராயம் ஏற்பட்டதுடன் அவன் மீது மிக்க அக்கறை செலுத்தினார்கள்.


இதனால் வசந்தா ரீச்சர் தனது மகள் தாரணிக்கு எல்லாத்துக்கும் கார்த்திக்கையே  உதாரணம் காட்டி ,

" அவனைப் பார்......
அவன் ஒரு கூலித்தொழிலாளியின்ர மகன்.
ஆனால் அவன் வீட்டை போய் புத்தகம் திறந்து படிக்க வீட்டில் விளக்குக்கு எண்ணை இருக்குமோ தெரியாது.
ஆனால் பள்ளிக்கூடத்தில கெட்டிக்காரனாக இருக்கிறான்.
ஆனா உனக்கு எல்லா வசதிகள் இருந்த போதும்,
கேட்டுப்படிக்க ஆட்களிருந்தும்,
நீ ஒரு ரியூப் லைட் மாதிரி இருக்கிறாய்..."

என்று எப்போதும் திட்டுவார். கணக்கில் பிழை விட்டால் சில வேளை நல்ல பூசையும் கொடுத்து விடுவார்.


இப்படி தாயரிடம் திட்டு வாங்கும் தாரணி இனி அம்மாவிடம் திட்டு வாங்கக் கூடாது என்று நினைத்து தீவிரமாகப் படிக்கத் தொடங்கினாள். ஆனாலும் அவளால் முடியவில்லை. "பானையில் இருப்பது தானே அகப்பையில் வரும் " என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டாலும் தாயாரின் "படி படி " என்ற நச்சரிப்பை தடுக்க என்ன வழி என்று யோசித்து கடைசியில் தெரியாதவற்றை  கார்த்திக்கிடமே  கேட்டுப் படிப்பது என்ற முடிவுக்கு வந்தாள்.


இதனால் கார்த்திக்குடன் தேவையின்றிக் கதைக்காத தாரணி, சேர்ந்து பழகிக் கதைக்கத் தொடங்கினாள். கதைக்கும் போது தனக்கு தாயாரால் விழும் பேச்சுக்களையும் காரணத்தையும் சொல்லி கவலைப்படுவாள். ஒரு நாள் அவன் முன்னால் அழுதும் விட்டாள்.


என்ன செய்வதென்று தெரியாது தவித்த கார்த்திக்

" இஞ்சருமப்பா தாரணி,
நீர் அழாதையும்...
நீர் குறை நினைக்கேல்லையெண்டா,
உமக்கு ஏதாவது டவுட் இருந்தால் என்னைக் கேளும்......
எனக்குத் தெரிஞ்சவரையில் சொல்லித் தாறேன். ….
ஒவ்வொரு அம்மாவுக்கும்,
தன் பிள்ளை நல்லா படிக்க வேணும் என்று தானே விரும்புவா .....
நீர் ஒன்றுக்கும் கவலைப்படாதையும்....
எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையோடு இரும்......."

என்று ஆறுதல் சொன்னான்.


இந்த ஆறுதல் வார்த்தைகள் தாரணிக்கு எப்போதும் எங்கும் கிடைத்ததில்லை. தனது வாழ்க்கை ஆறுதலற்ற ஒரு இயந்திர ரீதியாகவே அமைந்திருக்கிறது என்று பெருமூச்சு விட்டபடி தனது சட்டைக் கொலரினால் இரண்டு கண்களையும் துடைத்துவிட்டு அவனுக்கு முன்னால் அழுது விட்டதை நினைத்துவெட்கத்தில் அவனைப் பார்க்காமலேயே
 
" வகுப்புக்குப் போவம் வாரும்....."

என்று இருவரும் சேர்ந்து வகுப்புக்குச் சென்றார்கள்.


இதன் பின்னர் தாரணி தனது சந்தேகங்களை கார்த்திக்கிடம் கேட்கத் தொடங்கினாள். அவனும் அவற்றை எவ்வளவு சுலபமாக விளங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு சுலபமாக விளங்கப்படுத்தினான். அவன் மீதிருந்த அன்போ அல்லது அவன் விளங்கப்படுத்திய முறையோ என்னவோ தெரியவில்லை. தாரணிக்கு அவன் விளங்கப்படுத்தியது ஒவ்வொன்றும் பசுமரத்தில் ஆணியடித்தது போல் நன்றாகவே பதிந்தது. பரீட்சைகளிலும் வழமையை விட கூடுதல் புள்ளிகள் வாங்கத் தொடங்கினாள்.


இதனால் வசந்தா ரீச்சரும் தாரணியையும் கார்த்திக்கையும் வகுப்பில் பாராட்டிப் பேசத் தொடங்கினார். எல்லோருக்கும் முன்னால் இருவரையும் அழைத்து
 
"இவ்விருவரது திறமைகளையும், கொள்கைகளையும், ஆர்வத்தையும்,
 நீங்களும் பின்பற்றி முன்னுக்கு வர வேணும்.....
இது தான் உங்கள் வகுப்பாசிரியர் என்ற முறையில் உங்களிடம் இருந்து நான் எதிர்பார்ப்பது.......
இது தான் நீங்கள் படிப்பிக்கும் ஆசிரியருக்கு கொடுக்கும் மதிப்பு......,
மரியாதை.......,
தட்சணை எல்லாம்...."

என்று மனமுருகிப் பேசினார்.


இப்படி அவர் பேசும் போது வகுப்பிலுள்ளவர்கள் தாரணி, கார்த்திக்கின் மீது பொறாமைப்பட்டு, அவர்களைக் குழி பறிப்பதற்காக நேரத்தைச் செலவு செய்தார்களேயொழிய, தம்மை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் எதிலும் ஈடுபடவில்லை. ஆனால் வகுப்பறையில், எல்லோர் முன்னிலையிலும், தன்னை அம்மா பாராட்டும் போது, தாரணிக்கு, கார்த்திக் மீது மதிப்பும், ஒருவித எல்லை கடந்த பாசத்தையும் ஏற்படுத்தியது.


" நான் ஒரு மொக்காகத் தானே இருந்தேன்.
கார்த்திக்குடன் சேர்ந்து கதைத்து அவன் விளங்கப்படுத்தியதால் தானே என்னையும் அம்மா பாராட்டுகிறார்...
திடீர் திடீரென்று கட்டியணைத்துக் கொஞ்சுகிறார்.
முதலில் என்றால் வீட்டுக்குப் போனவுடன் படி படி என்று நச்சரிப்புத்தான்.
ஆனா இப்போ எங்க போனாலும் என்னைப் பற்றித் தான் கதைப்பார்.....
இதுக்கெல்லாம் காரணம் கார்த்திக்தானே....? "

என்று தனது மனதினுள் நினைத்து,
தனக்குக் கிடைத்த பெருமைக்கும், மதிப்புக்கும்,
கார்த்திக்கே காரணமென்று நம்பினாள்.


இதேபோல் தாரணி தன்னிடம் வந்து தனது துன்பங்களைச் சொல்லி அழுதது கார்த்திக்கும் அவள்மீது ஒரு அனுதாபத்தையும் போகப்போக ஒருவித பாசத்தையும் ஏற்படுத்தியிருந்தது.


இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் வசந்தா ரீச்சருக்கு தலைநகரில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு மாற்றலாகிச் செல்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பிரிவு நாளும் வந்தது. பிரியாவிடை என்ற பெயரில் ஒரு இழவு வீடு தான் நடந்தது என்று சொல்லலாம். ஏனெனில் 16 வருடமாக படிப்பிச்ச ரீச்சர் மாற்றலாகிப் போகிறார் என்று மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு விதமான பாச விடுப்பை ஏற்றுக் கொள்ள முடியாததால் ஆசிரியர் மாணவர் என்ற வேறுபாடின்றி அழுது கொண்டிருந்தார்கள்.


ஆனால் கார்த்திக்கும் தாரணியும் ஒருவருடைய கையை ஒருவர் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டே இருந்தார்கள். பின்னர் தமது வகுப்படைக்குப் போய் தமது மேசைகளில் இருந்து பார்த்தார்கள். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து பலமாக அழுதார்கள். பின்னர் தாரணி சொன்னாள்,

" கார்த்தி,
அம்மா பள்ளிக்கூடம் மாறும் போது என்னையும் சேர்த்து மாத்துவா என்று நினைக்கேல்ல...
ஆனால் பள்ளிக்கூடம் மாறினாலும் எனது மனசு மாறாது......
எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு...
நாங்க வளந்தாப்பிறகு ரெண்டு பேரும் தான் கலியாணம் செய்ய வேணும். ….
நான் உன்னைத் தான் கலியணம் பண்ணுவேன்......
உனக்கு என்னை பிடிச்சிருக்கா......?”

என்று கேட்டாள்.

" எனக்கும் உன்னைத் தான் பிடிச்சிருக்கு......
ரெண்டு பேரும் கலியாணம் செய்வோம்...."

என்று சொல்லி தாரணியை மீண்டும் இறுகக் கட்டிப்பிடித்து அழுதவாறே
அவளது கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டான்.
பதிலுக்கு அவளும் முத்தமிட்டாள்.