Friday, September 14, 2012

சிந்தனைக்கு

Wednesday, September 12, 2012

புரிந்திடாத அர்த்தங்கள்





பெண்ணவளின் பார்வையிலே பலகோடி அர்த்தங்கள்

பெருங்கணக்குப் போட்டாலும் புரிந்துவிடாது அதன் நுட்பங்கள்

இமைவேறு புருவம்வேறு அர்த்தங்கள் சொல்லும் - கண்

மணி அங்கு நடனமாடி கதை ஒன்று பேசும்



ஏக்கமாய் தூக்கமாய் நோமலாய் இருக்கலாம்

கோபமாய் சோகமாய் தாபமாய் இருக்கலாம்

நாணமாய் காதலாய் ஆசையாய் இருக்கலாம்

வேட்மைகயாய் வீரமாய் விவேகமாய் இருக்கலாம்



அவர்களாய் வாய்திறந்து சொல்லாத வரைக்கும் - நாம்

அறிந்து கொள்ள முடியாது அப்பார்வையின் அர்த்தத்தை

பரிந்து பரிந்து நாம் பசுமையாய்ப் பேசினாலும்

பகிரவே மாட்டார்கள் விரும்பாத அர்த்தத்தை



புரியாத புதிராய் இருக்கும் அப் பார்வையை

புதுமை இந்த உலகினிலும் புரியவே முடியவில்லை

இல்லாத ஒன்றினை கண்டுகொள்ளும் விஞ்ஞானிகள்

ஏனிதனைக் கண்டுகொள்ள முயற்சிகளை எடுக்கவில்லை



காலாதி காலமாய் கைமாறி வரும் அர்த்தம்

கனவிலும் வந்திடாது ஆண்களுக்கதன் நுட்பம்

ஏனிந்த வம்பு என்று ஒதுங்கியே நின்றிடாது

கனிந்த அவள் பார்வைக்கு அர்த்தங்கள் காணவேண்டும்



அப்பார்வை அர்த்தங்கள் இலகுவிலே புரிந்து விட்டால்

முப்புரமும் எரித்த அந்த சிவனாரே வந்தாலும்

அப்புரத்தில் உள்ள இளம் க(ன்)னியவளின் பார்வைக்கு

பதிலளிக்க வருவோரை யாரும் தடுக்க இயலாது.



Monday, September 10, 2012

சொற்பனம்



பால் வெள்ளை நிலவினிலே

பரந்த பெரும் பஞ்சணையில்

ஒய்யாரமாய் நான் இருக்க

ஓரக்கண்ணால் நீ பார்க்க

வெட்கத்தில் நான் தலை குனிய

உன்கரம் என் தலை கோதி

என் தலை நிமிர்த்திப் பார்த்து

இதழ்களில் உன் இதழ் பதித்து

ஊட்டி விட்டாய் உற்சாகத்தை

வெண்ணிலவும் வெட்கத்தில்

தன்னை மறைத்துக் கொள்ள

எமைச் சுற்றி கும்மிருட்டு

கருங்கலரில் படர்ந்திருக்க

இச்சாட்டில் நான் உன்னை

இறுக்கமாகக் கட்டித் தழுவ

தேடினேன் உன்னை என்

இரு கரம் கொண்டு,

புரண்டு வந்து விழுந்து விட்டேன்.

அப்போது

காலைச் சேவலும் கூவிற்று

கடிகாரத்தில் அலாரமும் அடித்திற்று

அப்போது தான் புரிந்து கொண்டேன்

நான் கண்டது கனவு என்று!!!!

Friday, September 7, 2012

எப்போது கூடுவது ஒரு கூட்டில்?




உன்னை நான் கரம் பிடித்து

ஊர் உலகம் கூட்டிச் சென்று

உன்னோடு நான் ஒன்றி இருந்து

ஊஞ்சலாடி மகிழ்வது எப்போது?



காலம் கரைகிறது தன் பாட்டில்

கயவர்கள் இருக்கிறார்கள் அவர் பாட்டில்

நாங்களும் இருக்கிறோம் எம் நாட்டில்

எப்போது கூடுவது நாம் ஒரு கூட்டில்?



கடவுளும் திறக்கவில்லை தன் கண்களை

முப்பொழுதும் தொழுகிறோம் அவர்களை

எப்போதும் நினைக்கவில்லை எங்களை

புகழ்கிறார்கள் மேன்(மென்)மையாக தங்களை.



நாம் இன்னும் நம்புகின்றோம் உம்மை

காத்துவிடும் என்றென்றும் எம்மை

சாத்துவோம் உமக்கு என்றும் மாலை

போற்றுவோம் எப்போதும் எம் வாழ்வில்!.

Wednesday, September 5, 2012

நீ என் பக்கத்தில் இருந்து விட்டால்...!


காலையிலே கண்விழித்து - உன்

கயல் விழிகளைப் பார்க்கையிலே

அணை பிரித்துப் பாய்கிறது

பெரு வெள்ளமாய் உற்சாகம்



சோர்ந்து போய் நானும் தொடர்ந்து படுத்திருக்கையிலே

உந்தனது கண்கள் எனக்குத் மட்டும் துணையாக, 

கட்டளை இடுகின்றன, எழுந்து பணி செய்வதற்கு,

உற்சாகத்துடன் விரைவாய் தொடர்கின்றேன் வேலைகளை.



சோகத்தில், கோபத்தில் சோர்ந்து போய் நானும்

படுக்கையில் விழுந்து துடித்திருக்கும் போது

உந்தனது புன்னகை வடிகாலாய் அமைந்து

எந்தனது உணர்வுகளுக்குத் தெளிவினைத் தருகின்றது.



உன் புருவங்களின் இடையினிலே அழகாக வீற்றிருக்கும்

வட்டமாக ஒட்டியுள்ள கருமை நிறப் பொட்டினிலே

குவிக்கின்றேன் ஒன்றாக்க, எந்தனது மனத்தினையும்

குவிப்பதற்கு எம்வாழ்வில் நன்நான்கு செல்வங்களையும்.



என்றுமே நீ எந்தன் பக்கத்தில் இருந்து விட்டால்

சோகமோ கோபமோ நெருங்கிவிட அஞ்சிவிடும்

காலத்தின் ஆசியுடன் உன்னை நான் கைபிடித்து

என்றும் உன்னை ஆக்கிடுவேன் இவ்வுலகின் ராணியாக.

Saturday, September 1, 2012

முட்டி நாமும் முயற்சி செய்வோம்




தாழ்வு மனப் பான்மை கொண்டு

தரணியில் சும்மா இருந்து விடாது

தொட்டாச் சிணுங்கி போல நாமும்

பட்டதற்கெல்லாம் சுருங்கி விடாது

தன் நகத்தை உடைத்து பட்டை தீட்டி

தன்னைத் தயார்படுத்தும் கழுகு போலே

முன்னுக்கு நாமும் வரவேண்டும்

விந்தைகள் பல படைத்திட வேண்டும்



வாய்ப்புக்களுக்காகக் காத்திருந்து - எம்

வழ்க்கைக் காலத்தைக் கரைத்து விடாது

வாய்ப்புக்களைத் தேடிச் சென்று

வரலாறு உலகில் எழுதிட வேண்டும்



"முடியாது" என்று உங்கள் மனதில்

மந்திரம் போல் உச்சரித்திருந்தால்

முடியால் தான் போய் விடும் - உங்கள்

முயற்சிகள் எல்லாம் முடிவினிலே.



"முடியும்' என்று நினைத்து நீங்கள்

முடிந்தவரை முயற்சி செய்தால்

கனியும் அந்த வேலை - உமக்கு

பாலில் பழம் நழுவியது போல்



எம்மை நாமே தாழ்த்திக் கொண்டு

எட்டி நாங்கள் இருந்து விடாது

முட்டி நாமும் முயற்சி செய்வோம்

தொட்டு விட அந்த வெற்றிக் கனிகளை