நாய் படாப்பாடு பட்டு - அந்த
நரக லோகம் தாண்டி வந்து
நடுக்கடலில் பயணம் செய்து
நல்வாழ்வு தேடி வந்து
தொட்டோம் இந்த பொன் பூமியை
அத்தியாவசியத் தேவைகள் தந்து
அதிலிருந்த அனைவரையும்
அன்பாகத் தாங்கி நின்று
அரவணைத்தார்கள் எம்மவரை
நெக்குருகிப் போனோம் - அவர்களின்
அன்பு உள்ளக் கருணை கண்டு.
ஒருவருடம் கழித்து விட்டு
ஒரு கடதாசித் துண்டு தந்து
குற்றங்கள் ஏதுமின்றி
குதர்க்கமான பதில் சொல்லி
குத்தரிசி போல் எம்மை
அவித்துக் குத்தி சமைக்கிறார்கள்.
மண்பானை உடைந்து அந்த
அடுப்பினுள் விழுந்த கதையாய்
எம் வாழ்வின் பகுதியெல்லாம்
அழிகிறது தடுப்பினிலே
வருடங்கள் மூன்று கடந்து விட்டாலும்
காணவில்லை இன்னும் எமக்கொரு தீர்வை.
அழுது புலம்புவதற்கு எம் கண்களில் நீருமில்லை
சிரித்துக் கும்மாளமடிப்பதற்கு உதட்டினில் வீரமுமில்லை
நெஞ்சினிலே ஈரமுள்ள இப்பூமி இதயங்களே
பதிலொன்று கொடுத்திடுங்கள் இந்த பாவிகளுக்கு - நாம்
சிரித்துச் சிறகடித்ப் பறப்பதற்கு...!
அழுது எம் துயரங்களை மறப்பதற்கு...!!